செய்திகள்
விவசாயிகளுக்கான நீதி மற்றும் உரிமையை வழங்க வேண்டும் - ராகுல் காந்தி
விவசாயிகளுக்கான நீதி மற்றும் உரிமையை மத்திய அரசு வழங்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.
புதுடெல்லி:
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், விவசாயிகளுக்கான நீதி மற்றும் உரிமையை மத்திய அரசு வழங்க வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டரில், சாலைகளிலும், வயல்களிலும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் கடின உழைப்புக்கு நாம் அனைவரும் கடன்பட்டு இருக்கிறோம். அந்த விவசாயிகளுக்கான நீதி மற்றும் உரிமையை வழங்குவதன் மூலமே இந்த கடனை ஈடுகட்ட முடியுமே தவிர, அவர்களுக்கு எதிராக தடியடி நடத்தியோ அல்லது கண்ணீர்புகை குண்டுகளை வீசியோ தவறாக நடந்து கொள்வதன் மூலம் அல்ல. ஆணவத்தின் நாற்காலியில் இருந்து இறங்கி, விவசாயிகளுக்கான உரிமையை வழங்குவது குறித்து சிந்தியுங்கள்” என பதிவிட்டுள்ளார்.