செய்திகள்
வாக்கு எண்ணிக்கை

பீகார் தேர்தல்: நொடிக்கு நொடி பரபரப்பு - முன்னனி நிலவரம் வெளியீடு

Published On 2020-11-10 06:17 GMT   |   Update On 2020-11-10 06:20 GMT
பீகார் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பாட்னா:

243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநில சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்றது. பீகாரில் ஆட்சியை கைப்பற்ற 122 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும்.

பீகார் தேர்தலில் தற்போதைய முதல்மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாரதிய ஜனதா இணைந்த கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

இந்த கூட்டணியை எதிர்த்து லாலு பிரசாத் யாதவின் மகனான தேஜஸ்வி யாதவ் தலைமையில் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சி இணைந்த மெகா கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

இதேபோல் ஆளும் பாஜக-ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய ஜனநாயக கூட்டணியில்( என்டிஏ) இருந்து பிரிந்த லோக் ஜனசக்தி கட்சி சிரங் பாஸ்வான் தலைமையில் தனித்து போட்டியிடுகிறது. ஆனாலும் பாஜகவுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கிறது. 

தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 முதல் தொடங்கியுள்ளது. 

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையில் முன்னிலையில் உள்ள கட்சிகளின் நிலவரம் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.

மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 230 தொகுதிகளுக்கான முன்னனி நிலவரங்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி, நிதிஷ்குமாரின் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக தலைமையிலான கூட்டணி 119 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி 100 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சி 1 இடத்திலும், அசாதுதீன் ஒவாய்சியின் ஆல் இந்தியா மஸ்ஜிதே இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி 1 இடத்திலும், சிரங் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி 5 இடங்களிலும், சுயேட்சைகள் 4 இடங்களிலும் முன்னிலையில் உள்ளனர். 
Tags:    

Similar News