செய்திகள்
சுப்ரீம் கோர்ட்

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு - கவர்னருக்கு உத்தரவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு

Published On 2020-10-22 22:58 GMT   |   Update On 2020-10-22 22:58 GMT
தமிழகத்தில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க கவர்னருக்கு உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது
புதுடெல்லி:

தமிழகத்தில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க கவர்னருக்கு உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் ஜெய சுகின் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க சட்டசபையில் ஏகமனதாக மசோதா கடந்த செப்டம்பர் 15-ந் தேதி நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா சட்டமானால், அரசுப் பள்ளிகளில் படித்த ஏழை சமூகத்தின் அடித்தட்டு பிரிவைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பலன் கிடைக்கும்.

ஆனால், மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் உள்ளார். இதனால் நீட் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகும், எம்.பி.பி.எஸ். சேர்க்கை தொடங்காமல் உள்ளது. இந்த மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதால் தேவையற்ற சர்ச்சைகள் உருவாகியுள்ளன. தமிழகத்தின் வளர்ச்சியை பாதிக்கிறது. எனவே, மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க கவர்னருக்கு உத்தரவிட வேண்டும் என கூறியுள்ளார்.

இந்த மனு சுப்ரீம் கோட்டில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News