செய்திகள்
நீட் தேர்வு முடிவுகள்... திருத்தப்பட்ட புள்ளிவிவர பட்டியலை வெளியிட்டது தேர்வு முகமை
நீட் தேர்வு முடிவுகள் தொடர்பான புள்ளிவிவர அறிவிப்பில் குளறுபடி கண்டறியப்பட்டதையடுத்து, திருத்தம் செய்யப்பட்டு புதிய பட்டியல் வெளியிடப்பட்டது.
புதுடெல்லி:
நீட் தேர்வு முடிவுகள் நேற்று மாலை வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகள் தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இந்திய அளவில், மாநில அளவில் தேர்ச்சி விகிதம் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய புள்ளிவிவர பகுப்பாய்வு பட்டியலும் வெளியிடப்பட்டிருந்தது.
இந்த தேர்வு அறிவிப்பில் பல்வேறு குளறுபடி ஏற்பட்டது தெரியவந்தது. குறிப்பாக, தேர்வு எழுதிய மாணவர்களை விட அதிக தேர்ச்சி, மாநில தேர்ச்சி விகிதத்தில் ஏற்ற இறக்கம் என பல்வேறு குளறுபடிகள் இருந்ததால் சர்ச்சை எழுந்தது. மாணவர்கள் மற்றும் பெற்றோரும் இதனால் குழப்பம் அடைந்தனர்.
இதனையடுத்து, தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் இருந்து தேர்வு முடிவு தற்காலிகமாக நீக்கப்பட்டது. அதன்பின்னர் சில மணி நேரத்தில் புள்ளிவிவர பட்டியலில் திருத்தம் செய்யப்பட்டு மீண்டும் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. திரிபுரா, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், தெலுங்கானா போன்ற மாநிலங்களுக்கான புள்ளிவிவரத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
நாட்டிலேயே அதிக தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பட்டியலில் தமிழகத்திற்கு 5ம் இடம் கிடைத்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் 99,610 பேர் தேர்வு எழுதிய நிலையில், 57.4 சதவீதம் பேர், அதாவது 57,215 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.