செய்திகள்
கொரோனா இறப்பு விகிதம் முதல்முறையாக 2 சதவிகிதத்திற்கும் கீழ் குறைந்துள்ளது - மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தகவல்
இந்தியாவில் முதல்முறையாக கொரோனா இறப்பு விகிதம் 2 சதவிகிதத்திற்கும் கீழ் குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக தினமும் சராசரியாக 50 ஆயிரத்துக்கும் அதிகமாக புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி, மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட தகவலின்படி நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் 53 ஆயிரத்து 601 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 22 லட்சத்து 68 ஆயிரத்து 675 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 6 லட்சத்து 39 ஆயிரத்து 929 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வைரஸ் பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 47 ஆயிரத்து 746 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 15 லட்சத்து 83 ஆயிரத்து 489 ஆக அதிகரித்துள்ளது.
ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 871 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 45 ஆயிரத்து 257 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், முதல் முறையாக நாட்டில் கொரோனா வைரஸ் இறப்பு விகிதம் 2 சதவிகித்திற்கும் கீழ் குறைந்துள்ளது. வைரஸ் இறப்பு விகிதம் நாட்டில் 1.99 சதவிகிதமாக குறைந்துள்ளது என தெரிவித்தார்.