செய்திகள்
நீட் தேர்வு

‘நீட்’ உள்ளிட்ட தேர்வுகளை நடத்துவதற்கான பாதுகாப்பு வழிமுறைகள் வெளியீடு

Published On 2020-07-08 13:05 GMT   |   Update On 2020-07-08 13:05 GMT
‘நீட்’ தேர்வு மற்றும் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகளை நடத்துவதற்கான பாதுகாப்பு வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாடு முழுவதும் ‘நீட்’ தேர்வு (NEET), பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகள் (JEE MAIN) மற்றும் கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வுகளை நடத்துவதற்கான பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“தேர்வு நடக்கும்போது மாணவர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை கட்டாயம் நடத்தப்பட வேண்டும். தேர்வு அறை கண்காணிப்பாளருக்கு உடல்நிலை சான்றிதழ் அவசியம் வழங்கப்பட வேண்டும்.

மாணவர்களுக்கு புதிய முக கவசங்கள் மற்றும் கையுறைகள் வழங்கப்பட வேண்டும்.

தேர்வு மையத்தின் சுவர்கள், கதவுகள், ஜன்னல்கள் உள்ளிட்ட இடங்களில் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். மாணவர்கள் அமர்ந்து தேர்வு எழுதும் இருக்கைகள் அனைத்தும் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும்.

மாற்று திறனாளி மாணவர்கள் அமரும் சக்கர நாற்காலிகளும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும்.

மாணவர்கள் அமரும் இருக்கை எண்களை ஸ்டிக்கர் அல்லது வண்ண பெயிண்ட் மூலம் குறிப்பிட வேண்டும்.

தேர்வு நடைபெறும் இடங்களில் உள்ள குப்பை தொட்டிகளை அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும்.

தேர்வு மையத்திற்கு மாணவர்கள் மற்றும் அவர்களுடன் பெற்றோரும் வரும்போது தேர்வு எழுதும் வளாகத்தில் கூட்டம் ஏற்படாமல் தவிர்க்க வேண்டும்.

தேர்வு முடிந்த பிறகு மாணவர்கள் அமர்ந்து தேர்வு எழுதிய அனைத்து இருக்கைகளும் கிருமி நாசினியால் சுத்தம் செய்யப்பட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News