செய்திகள்
கொரோனா பரிசோதனை

இந்தியாவில் இதுவரை 75.60 லட்சம் மாதிரிகள் பரிசோதனை- ஐசிஎம்ஆர் தகவல்

Published On 2020-06-25 04:27 GMT   |   Update On 2020-06-25 04:27 GMT
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,07,871 மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் இதுவரை 473105 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவில், கடந்த 24 மணி நேரத்தில் 16922 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14894 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு விகிதம் 3.2 சதவீதமாக உள்ளது.

இதுவரை 271697 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். குணமடையும் விகிதம் 56.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 186514 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

நேற்று வரை 75,60,782 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,07,871 மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது. 

ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பொதுவெளியில் மக்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாலும், பரிசோதனைகளை தொடர்ந்து அதிகரிப்பதாலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது.
Tags:    

Similar News