செய்திகள்
இந்தியாவில் ஆயிரத்தை தாண்டியது கொரோனா உயிரிழப்பு
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 1007 ஆக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் வைரஸ் அதிவேகமாக பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் பரிசோதனைகளை அதிகரிக்க அதிகரிக்க, புதிய நோயாளிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இறப்பு விகிதமும் உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்தை கடந்துள்ளது. மொத்தம் 31332 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1897 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 73 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1007 ஆக உயர்ந்துள்ளது. 7696 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.
நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 9318 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 400 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத்தில் 3744 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 181 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் டெல்லியில் 3314 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 54 பேர் உயிரிழந்துள்ளனர்.