செய்திகள்
ஊரடங்கு காரணமாக வெளி மாநிலத்தில் இருந்து சொந்த ஊருக்கு நடந்தே வரும் மக்கள் (கோப்பு படம்)

ஏழைக் குடும்பங்களின் கைகளுக்கு பணத்தை கொண்டு சேருங்கள் - ப.சிதம்பரம்

Published On 2020-04-08 19:28 GMT   |   Update On 2020-04-08 23:32 GMT
மத்திய அரசு ஏழைக் குடும்பங்களின் கைகளுக்கு பணத்தை கொண்டு சேர்க்க வேண்டும் என முன்னாள் மத்திய நிதிமந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:      

உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. 

நாடு முழுவதும் 5 ஆயிரத்து 247 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. மேலும், கொரோனாவுக்கு நாடு முழுவதும் இதுவரை 149 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையே, இந்தியாவில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் மார்ச் 24 முதல் ஏப்ரல் 14 வரை 21 நாட்களுக்கு சுய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

ஊரடங்கு காரணமாக பெரும்பாலான மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக ஏழை எளிய மக்கள் போதிய வேலைவாய்ப்பு இல்லாமலும், வருமானம் இல்லாமலும் திண்டாடி வருகின்றனர். இதனால் அன்றாட வாழ்வில் பல சிக்கல்கள் நிலவி வருகிறது. 

இந்நிலையில், ஏழைக் குடும்பங்களின் கைகளில் பணம் சென்றடைவதை மத்திய அரசு உறுதி செய்யவேண்டும் என முன்னாள் நிதிமத்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 



இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், '' ஊரடங்கு உத்தரவின் காரணமாக ஏழைகளின் வாழ்வாதாரம் முடங்கிவிட்டது. அவர்களுக்கு நாள் ஊதியமோ வருமானமோ கிடையாது 

அரசின் முதல் கடமை ஏழைக் குடும்பங்களின் கைகளில் பணத்தைச் சேர்ப்பது. இதைச் செய்ய முடியும், செய்ய வேண்டும். எத்தனை முறை இதனை நாங்கள் வலியுறுத்தினாலும் அரசு எங்கள் கருத்தை ஏற்க மறுக்கிறது.

இதனைச் செய்யாத வரை இந்த அரசு ஏழைகளைப் பற்றிக் கவலைப்படாத, மனிதாபிமானமில்லாத அரசு என்று தானே கருத வேண்டும்?’’ என அவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News