செய்திகள்
டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள்

டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 647 பேருக்கு கொரோனா - தமிழ்நாட்டில் 364 பேருக்கு பாதிப்பு

Published On 2020-04-04 10:28 GMT   |   Update On 2020-04-04 10:28 GMT
டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 647 பேருக்கு கொரோனா நோய் இருப்பதை உறுதி செய்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி:
டெல்லியில் நடந்த தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்று ஊர் திரும்பிய ஏராளமானோரை கொரோனா தாக்கி உள்ளது. அவர்கள் மூலம் பலருக்கும் பரவி உள்ளது.

இந்த மாநாடு மார்ச் மாதம் முழுவதும் நடந்து வந்த நிலையில் கடைசி கட்ட மாநாட்டில் பங்கேற்ற பலருக்கு நோய் பரவி உள்ளது.

மாநாட்டில் 960 வெளிநாட்டினர் பங்கேற்றார்கள். அவர்கள் மூலம் நோய் பரவியதாக கருதப்படுகிறது.
மாநாடு முடிந்து ஏராளமானோர் ஊர் திரும்பி விட்டார்கள். அங்கு அவர்களுக்கு நோய் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது.

டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 647 பேருக்கு கொரோனா நோய் இருப்பதை உறுதி செய்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

இந்தியாவில் தற்போது 2322 பேருக்கு கொரோனா நோய் உள்ளது. அதில் 30 சதவீதம் பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மாநாட்டில் பங்கேற்ற 14 மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு நோய் தாக்கி உள்ளது. அதன்படி டெல்லி, அசாம், இமாச்சல பிரதேசம், அரியானா, காஷ்மீர், ஜார்கண்ட், கர்நாடகா, மராட்டியம், ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலுங்கானா, உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நோய் தாக்கியவர்கள் உள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அதிகாரி தாவ்அகர்வால் தெரிவித்தார். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 336 பேரை நோய் தாக்கி உள்ளது. 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
டெல்லி மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டினர் பலர் தலைமறைவாகி டெல்லியில் ஆங்காங்கே பதுங்கி இருந்தனர். அவர்களில் 500-க்கும் மேற்பட்டோரை நேற்று கண்டுபிடித்தனர். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மேலும் மாநாட்டில் பங்கேற்றவர்களை டெல்லியில் உள்ள ஆஸ்பத்திரி, உத்தரபிரதேசம் காசியாபாத்தில் உள்ள ஆஸ்பத்திரிகளில் தனிமைப் படுத்தி சிகிச்சை அளித்தனர். அவர்கள் ஒத்துழைக்க மறுத்து பிரச்சினை செய்ததால் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டார்கள்.

காசியாபாத்தில் சிகிச்சை பெற்றவர்கள் மோதலில் ஈடுபட்டதால் அவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 411 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அதில் 364 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் ஆவர். இதுசம்பந்தமாக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறும்போது, தமிழ்நாட்டில் இருந்து டெல்லி மாநாட்டில் 1103-லி ருந்து 1200 பேர் வரை பங்கேற்றுள்ளனர்.
அவர்களில் பலர் தானாக பரிசோதனைக்கு முன்வந்துள்ளனர். இதுவரை பரிசோதித்ததில் 364 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. 303 பேருக்கு பாதிப்பு இல்லை. இன்னும் பலருடைய பரிசோதனை முடிவு வரவில்லை என்று கூறினார்.

மேலும் அவர் கூறும்போது, சில நோயாளிகள் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற விரும்பினார்கள். அவர்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்றும் தெரிவித்தார்.
Tags:    

Similar News