செய்திகள்
தப்லிகி ஜமாத் அமைப்பைச் சேர்ந்த 960 வெளிநாட்டினர் விசா ரத்து
தப்லிகி ஜமாத் அமைப்பைச் சேர்ந்த அமெரிக்கா, சீனா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட 960 வெளிநாட்டினர் விசா ரத்து செய்யப்பட்டு உள்ளது.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் உள்ள நிஜாமுதீன் பகுதியில் இந்த மாதம் தொடக்கத்தில் தப்லிகி ஜமாத் மாநாடு நடைபெற்றது. இதில் 250-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் உள்பட 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் பங்கேற்ற பலருக்கு கொரோனா தொற்று இருந்தது. அவர்கள் மூலம் பலருக்கும் பரவியதால் சர்ச்சை ஏற்பட்டது.
இவர்களில் 300 க்கும் மேற்பட்ட தப்லிகி ஜமாத் ஆர்வலர்கள் கொரோனா சோதனை செய்துள்ளனர். மற்றவர்கள் வெவ்வேறு தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை சுமார் 400 கொரோனா பாதிப்புகளும், நாட்டில் சுமார் 12 இறப்புகளும் நிஜாமுதீன் மார்க்கஸுடன் தொடர்பு வைத்திருப்பது கண்டறியப்பட்டது.
இந்நிலையில், தப்லிகி ஜமாத் அமைப்பைச் சேர்ந்த வெளிநாட்டினர் 960 பேருக்கான சுற்றுலா விசா ரத்து செய்யப்பட்டு அவர்களது விசா தடுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் 4 அமெரிக்கர்கள், 9 இங்கிலாந்து நாட்டவர், 6 சீனர்கள் அடங்குவர். மேலும், 379 இந்தோனேசியர்கள், 110 வங்காள தேசத்தவர்கள், 63 மியான்மர் நாட்டவர், 33 இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்களும் அடங்குவார்கள் என தெரிவித்துள்ளது.