செய்திகள்
ஆலோசனையில் பங்கேற்ற பி.வி.சிந்து மற்றும் விளையாட்டு பிரபலங்கள்

கொரோனா பாதிப்பு... விளையாட்டு பிரபலங்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

Published On 2020-04-03 07:22 GMT   |   Update On 2020-04-03 07:22 GMT
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், விளையாட்டு பிரபலங்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடினார்.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

எனினும் சமூக விலகலை கடைப்பிடிக்காமல் சில இடங்களில் பொதுமக்கள் தெருக்களில் சர்வசாதாரணமாக சுற்றுகின்றனர். எனவே, சமூக விலகல் தொடர்பாக அரசு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.



இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் மற்றும் வைரஸ் பரவலின் தற்போதைய நிலை குறித்து, விளையாட்டுத்துறையைச் சேர்ந்த 40 முன்னணி வீரர்களோடு பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.  காணொலி மூலம் நடைபெற்ற இந்த ஆலோசனையில், சச்சின் டெண்டுல்கர், கங்குலி, பி.வி. சிந்து, ஹிமா தாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

இந்த ஆலோசனையின்போது, விளையாட்டு பிரபலங்கள் கொரோனா தடுப்பு பணிக்கு தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும் என மோடி கேட்டுக்கொண்டார்.

இதேபோல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி நேற்று மாநில முதல்வர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், காணொலி காட்சி மூலம் மாநில ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்களுடன் ஆலோசனை நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News