செய்திகள்
டெல்லி வன்முறைக்கும் இந்த புகைப்படத்திற்கும் தொடர்பு இருக்கிறதா?
சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகும் புகைப்படத்திற்கும் டெல்லி வன்முறை சம்பவங்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என தொடர்ந்து பார்ப்போம்.
பாதுகாப்பு அதிகாரி சாலையில் ஒருவரை காலால் கொடூரமாக மிதிக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகியுள்ளது. அமைதியை வலியுறுத்தி போராடிய முஸ்லீம்களிடம் டெல்லி போலீசார் நடந்து கொண்ட விதத்தை பாருங்கள் எனும் தலைப்பில் வைரல் புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது.
வைரல் புகைப்படத்தை உண்மையென நம்பி பலர் தங்களது வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். வைரல் புகைப்படத்தை இணையத்தில் தேடியபோது, இந்த புகைப்படம் சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. வைரல் புகைப்படம் டெல்லியில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும், உண்மையில் அது காஷ்மீரில் எடுக்கப்பட்டது ஆகும்.
வைரல் புகைப்படத்தின் உண்மை பின்னணி பற்றி அதிகாரப்பூர்வ விவரங்கள் தெரியவில்லை. ஆனாலும் இதே புகைப்படம் மார்ச் 2016-லும் ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. புகைப்படத்தில் சோஃபி அசன் என்பவர் எடுத்தார் என்பதை உறுதிப்படுத்தும் காப்பிரைட் சின்னம் இடம்பெற்றிருக்கிறது.
இந்த புகைப்படம் சில ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீநகரில் நடைபெற்ற போராட்டத்தின் போது எடுக்கப்பட்டது என செய்தியாளரான சோஃபி தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் வைரல் புகைப்படம் டெல்லி வன்முறையின் போது எடுக்கப்படவில்லை என்பது தெளிவாகிவிட்டது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைதளங்களில் வரும் தகவல்களின் உண்மைத்தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.