மான் கீ பாத் நிகழ்ச்சியில் அவ்வையார் வரிகளை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மான் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களுக்கு வானொலியில் உரையாற்றி வருகிறார்.
இன்று அவர் உரையாற்றும் போது அவ்வையாரின் வரிகளை மேற்கோள் காட்டினார். “கற்றது கை மண் அளவு, கல்லாதது உலக அளவு” என்று அவர் குறிப்பிட்டார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
வேற்றுமையில் ஒற்றுமை என்பது ஒட்டு மொத்த மனித இனத்திற்கே மதிப்புமிக்க பொக்கிஷமாக விளங்குகிறது. இதனை நாம் பாதுகாத்து ஆராய வேண்டும்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்து நமது இளைஞர்கள் ஆர்வத்துடன் பேசி வருகிறார்கள். சந்திராயன்-2 விண்கலம் ஏவப்பட்ட நிகழ்ச்சியை பார்க்க இஸ்ரோ சென்ற போது குழந்தைகளின் உற்சாகத்தை காண முடிந்தது.
இளைஞர்கள் மத்தியில் அறிவியல் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் வகையில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. ராக்கெட் ஏவப்படுவதை ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து நீங்கள் நேரடியாக பார்க்கலாம். இதற்காக 10 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது
கேரளாவில் வசித்து வரும் பகீரதி என்ற பெண் 10 வயதாகும் போது பள்ளி படிப்பை பாதியில் விட்டார். தற்போது 105 வயதில் தனது படிப்பை மீண்டும் துவங்கியதுடன் 4-ம் நிலை தேர்வில் 70 சதவீத மதிப்பெண்களை பெற்றார். அனைவருக்கும் முன்மாதிரியான அவருக்கு நான் எனது மரியாதையை செலுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.