செய்திகள்
ஜம்மு ஐ.ஜி. முகேஷ் சிங்

ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் மோதல்: 3 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றது போலீஸ்

Published On 2020-01-31 05:12 GMT   |   Update On 2020-01-31 08:28 GMT
ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் நடந்த துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகளை போலீசார் சுட்டு வீழ்த்தினர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
ஜம்மு:

ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் போலீசார் இன்று அதிகாலை தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நக்ரோடா நகரின் பான் பகுதியில் உள்ள சங்கச்சாவடி அருகே, ஒரு லாரியை சந்தேகத்தின்பேரில் போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர். அப்போது அந்த லாரியில் இருந்த பயங்கரவாதிகள் திடீரென வெளியே வந்து போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். போலீசாரும் பதிலுக்கு துப்பாக்கி சூடு நடத்தினர்.

சிறிது நேரம் நீடித்த இந்த துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். போலீஸ் தரப்பில் ஒரு வீரர் காயமடைந்தார். சில பயங்கரவாதிகள் தப்பிச் சென்றுவிட்டனர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து 4 ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. 

சமீபத்தில் சர்வதேச எல்லை வழியாக ஊடுருவிய பயங்கரவாதிகள் சிலர், ஸ்ரீநகருக்கு செல்லும் வழியில் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், அப்போது நடந்த மோதலில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் ஜம்மு காஷ்மீர் டிஜிபி தில்பக் சிங் தெரிவித்தார். தப்பிச் சென்ற பயங்கரவாதிகளை பிடிக்க, தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெறுகிறது.

மேலும் 4 பயங்கரவாதிகள் அப்பகுதியில் பதுங்கியிருக்கலாம் என்றும், அந்த பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகவும் ஜம்மு காவல்துறை ஐஜி முகேஷ் சிங் தெரிவித்தார்.

பயங்கரவாதிகள் ஊடுருவல் மற்றும் துப்பாக்கி சண்டையைத் தொடர்ந்து நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நக்ரோடா முழுவதும் உள்ள பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டது.
Tags:    

Similar News