செய்திகள்
கொரோனா வைரசால் கேரள நர்சுகளுக்கு பாதிப்பா? - வெளியுறவுத் துறையிடம் விளக்கம் கேட்கும் பினராயி விஜயன்
கேரள நர்சுகள் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்துள்ளனரா என்பதை சவுதி அரேபியா அரசிடம் கேட்டு விளக்கவேண்டும் என முதல் மந்திரி பினராயி விஜயன் வெளியுறவுத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.
திருவனந்தபுரம்:
சீனாவின் வுகான் நகரிலிருந்துதான் கொரோனா வைரஸ் நோய் முதலில் பரவியது. அதைத்தொடர்ந்து ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து, தைவான் ஆகிய நாடுகளிலும் இந்த வைரசின் தாக்கம் உள்ளதாக கண்டறியப்பட்டு உள்ளது. புதிய கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து மற்ற நாடுகளுக்கும் பரவலாம் என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து, தங்களது நாடுகளில் இந்த வைரஸ் பரவுவதை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை எடுத்து வருகின்றன.
இந்நிலையில், கேரள நர்சுகள் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்துள்ளனரா என சவுதி அரேபியா அரசிடம் கேட்டு விளக்கவேண்டும் என முதல் மந்திரி பினராயி விஜயன் வெளியுறவுத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக, பினராயி விஜயன் எழுதியுள்ள கடிதத்தில் கூறுகையில், சவுதியில் கேரள நர்சுகள் ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர். கொரோனா வைரஸ் அவர்களை தாக்கி உள்ளதா? என்பதை சவுதி அரசை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.