செய்திகள்
உ.பி.யில் பரபரப்பு - போலீசார் அனுமதி மறுத்ததால் ஸ்கூட்டரில் சென்ற பிரியங்கா காந்தி
உத்தர பிரதேசத்தில் போலீசார் அனுமதி மறுத்ததால், காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் பிரியங்கா காந்தி, ஸ்கூட்டரில் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
லக்னோ:
மத்திய அரசு நிறைவேற்றிய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் சில அமைப்புகள் சார்பிலும் நடந்த போராட்டத்தில் சில இடங்களில் வன்முறை ஏற்பட்டது. இதனை அடுத்து கலகத்தில் ஈடுபட்டோரை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். பலர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல், உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோ நகரிலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி எஸ்.ஆர். தாராபுரி (76) கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட தாராபுரியின் குடும்ப உறுப்பினர்களை சந்திக்க காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி இன்று அங்கு புறப்பட்டுச் சென்றார். ஆனால், மாநில போலீசார் பிரியங்கா காந்தியை வழியிலேயே தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து, பிரியங்கா காந்தி காரில் இருந்து இறங்கி ஸ்கூட்டரின் பின்புறத்தில் ஏறி அமர்ந்தபடி சென்றார். தாராபுரி குடும்ப உறுப்பினர்களை சந்தித்துப் பேசினார்.
போலீசார் அனுமதி மறுத்ததால் ஸ்கூட்டரில் சென்று ஐபிஎஸ் அதிகாரியின் குடும்ப உறுப்பினர்களை பிரியங்கா காந்தி சந்தித்தது உ.பி.யில் பரபரப்பை ஏற்படுத்தியது.