காஷ்மீரில் விரைவில் சட்டசபை தேர்தல்- கவர்னர் முர்மு தகவல்
ஸ்ரீநகர்:
காஷ்மீர் மாநிலத்தில் பாரதிய ஜனதா கூட்டணியுடன் மெகபூபாவின் மக்கள் ஜனநாயக கட்சி ஆட்சி நடத்தி வந்தது.
2017-ம் ஆண்டு ஜூன் மாதம் தனது ஆதரவை பாரதிய ஜனதா விலக்கி கொண்டதையடுத்து மெகபூபா ஆட்சி கவிழ்ந்தது. இதனால் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து ஜனாதிபதி ஆட்சியே நடந்து வருகிறது.
இந்த நிலையில் காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதுடன் அந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. அதாவது காஷ்மீர், லடாக் ஆகிய இரு மாநிலங்களாக அவை பிரிந்துள்ளன.
அதில் லடாக் சட்டசபை இல்லாத மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீருக்கு மட்டும் சட்டசபை உள்ளது.
2 ஆண்டுகளாக அங்கு தேர்தல் நடத்தப்படாமல் இருந்த நிலையில் அங்கு தேர்தல் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த தகவலை கவர்னர் கிரிஷ் சந்திரா முர்மு தெரிவித்துள்ளார்.
ஜம்முவில் போலீஸ் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முர்மு கூறியதாவது:-
காஷ்மீர் மாநிலத்தில் அமைதி ஏற்பட போலீசார் தங்களது மிக உயர்ந்த அர்ப்பணிப்புகளை செய்திருக்கிறார்கள். இது விலைமதிக்க முடியாதது. அடுத்ததாக நடைபெற உள்ள தேர்தலிலும் நீங்கள் முக்கியமாக பங்காற்ற வேண்டும். இந்த மாநிலம் விரைவில் தேர்தலை சந்திக்கப்போகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.