செய்திகள்
ஃபேஸ்புக்கில் வைரலாகும் புதிய ரூ. 1,000 நோட்டு
ஃபேஸ்புக் தளத்தில் புதிய ரூ. 1,000 நோட்டுக்களின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளது. விரைவில் இது பயன்பாட்டிற்கு வழங்கப்பட இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசு 2016 ஆம் ஆண்டு ரூ. 1,000 நோட்டுக்கள் செல்லாது என அறிவித்து, அவற்றுக்கு மாற்றாக ரூ. 2,000 நோட்டுக்களை மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கியது. பின் ரூ. 2,000 நோட்டுக்களும் விரைவில் செல்லாது என அறிவிக்கப்பட்டு மீண்டும் ரூ. 1,000 நோட்டுக்கள் புதிதாக வழங்கப்படும் என தகவல் பரவி வருகிறது.
இவைதவிர புதிய ரூ. 1,000 நோட்டுக்கள் என பல்வேறு புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில் புதிதாக ரூ. 1,000 நோட்டின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. விரைவில் இந்த ரூ. 1,000 நோட்டுக்கள் மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படும் என கூறப்படுகிறது.
ஃபேஸ்புக்கில் வைரலாகும் ரூ. 1,000 புகைப்படத்தில் மகாத்மா காந்தி புகைப்படம் இடதுபுறத்திலும், ரூ. 1,000 மத்தியிலும், ரிசர்வ் வங்கி படம் வலதுபுறத்திலும் இடம்பெற்றிருக்கிறது. புதிய ரூ. 1,000 புகைப்படத்தை பார்த்ததும், பலர் இது உண்மையென பகிர்ந்து வருகின்றனர்.
சிலர் புதிய ரூ. 1,000 நோட்டு புகைப்படத்தின் இரு பக்கங்களையும் பகிர்ந்து வருகின்றனர். எனினும் புகைப்படத்தை உற்று நோக்கும் போதே இது ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ ரூபாய் நோட்டு இல்லை என தெரிகிறது. ரூ. 1,000 வைரல் புகைப்படம் வரைபட கலைஞரின் கற்பனையில் உருவாகி இருக்கிறது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக ரூ. 1,000 வைரல் படத்தின் வலதுபுற ஓரத்தில் கற்பனையில் உருவானது என அச்சிடப்பட்டுள்ளது. மேலும் ஆயிரம் ரூபாய் தொகையை வழங்கக்கோரும் வாக்கியத்தில் எழுத்துப்பிழை செய்யப்பட்டுள்ளது. இத்துடன் ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையெழுத்திற்கு பதில் மகாத்மா காந்தியின் கையெழுத்து இடம்பெற்றிருக்கிறது.
இந்தியாவில் புதிதாக ரூபாய் நோட்டுக்கள் வெளியாகும் பட்சத்தில் அதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல்களை ரிசர்வ் வங்கி சார்பில் வெளியிடப்படும். புதிய ரூ. 1,000 நோட்டு வெளியிடுவது பற்றி ரிசர்வ் வங்கி சார்பில் இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பலர் பாதிக்கப்படுகின்றனர். சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கிறது.