கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் கனமழை எச்சரிக்கை
திருவனந்தபுரம்:
கேரளாவில் இந்த ஆண்டு கடந்த ஜூன் மாதம் தென் மேற்கு பருவமழை தொடங்கியது. முதலில் போதுமான அளவு மழை பொழிவு கிடைக்கவில்லை.
அதன்பிறகு இந்த மாத தொடக்கத்தில் இருந்து தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தது. இதனால் கேரளாவில் பல மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.
குறிப்பாக மலப்புரம், கோழிக்கோடு போன்ற மாவட்டங்களில் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பலரும் உயிரிழந்தனர். மழை வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான வீடுகளும் இடிந்தன. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்தனர்.
அதன்பிறகு மழை குறைந்து இயல்புநிலை திரும்ப தொடங்கியதால் முகாம்களில் இருந்து மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பினார்கள். இந்த நிலையில் கேரளாவில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என்று கொச்சி வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
இடுக்கி, எர்ணாகுளம், மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய 5 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மழையின் போது பலத்த காற்று வீசும் என்றும், பல இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
இதைத் தொடர்ந்து இந்த 5 மாவட்டங்களிலும் அனைத்து துறை அதிகாரிகளும் தயார்நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். மீட்புப்படையினரும் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர்.
மழை காரணமாக கடலில் சீற்றமும், சூறைக்காற்றும் இருக்கும் என்பதால் கேரள மீனவர்கள் 2 நாட்களுக்கு கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்.