செய்திகள்
ரன்தீப் சுர்ஜேவாலா

மோடி அரசின் தனிப்பட்ட பகையை தீர்க்கும் அமைப்பு சிபிஐ -ரன்தீப் சுர்ஜேவாலா

Published On 2019-08-22 07:18 GMT   |   Update On 2019-08-22 07:18 GMT
முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்தை சிபிஐ நேற்றிரவு கைது செய்யப்பட்டது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கருத்து தெரிவித்துள்ளார்.
புது டெல்லி:

டெல்லியில் உள்ள முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் வீட்டுக்கு சிபிஐ  அதிகாரிகள் சென்று ஐ.என்.எஸ். மீடியா வழக்கு குறித்து நேற்று காலை முதலே விசாரணை மேற்கொண்டு வந்தனர். ப.சிதம்பரம் எங்கு இருக்கிறார் என்பது தெரியாத நிலையில் லுக் அவுட் போஸ்டரும் பிறப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து நேற்றிரவு ப.சிதம்பரம் வீட்டுக்கு சென்றதை அறிந்த சிபிஐ அதிகாரிகள் அவரது வீட்டுக்குச் சென்றனர். அங்கு கதவு பூட்டப்பட்டிருந்ததால் அவரது வீட்டின் சுவர் மீது ஏறி குதித்து உள்ளே சென்றனர்.

பின்னர் ப.சிதம்பரத்தை கைது செய்த சிபிஐ அதிகாரிகள் தங்களது காரில் அவரை சிபிஐ அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் அவர் வைக்கப்பட்டார்.



இந்த வழக்கு தொடர்பான விசாரணையை சிபிஐ இன்று காலை முதலே சிதம்பரத்திடம் நடத்தி வருகிறது. மேலும் மாலைக்குள் சிபிஐ, அவரை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அவசர கைதுக்கு பல அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘9 ஆண்டுகளுக்குப் பின்னர் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 11 ஆண்டுகளுக்கு பின் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

இதில் எந்தவொரு நியாயமும் இல்லை. முழுக்க முழுக்க மோடி அரசின் மூலம் நடத்தப்பட்டுள்ளது. சிபிஐ, மத்திய அரசின் தனிப்பட்ட பகையை தீர்த்துக்கொள்ளும் அமைப்பாக மாறியுள்ளது என்பதுதான் உண்மை. இதன்மூலம் இந்தியா, ஜனநாயகப் படுகொலையை நேற்று பார்த்துள்ளது’ என கூறினார்.
Tags:    

Similar News