செய்திகள்
மன்மோகன் சிங்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ராஜஸ்தானில் இருந்து பாராளுமன்ற மேல்சபை எம்.பி. ஆகிறார்

Published On 2019-08-10 10:27 GMT   |   Update On 2019-08-10 10:27 GMT
ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து பாராளுமன்ற ராஜ்யசபை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வரும் 13-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
புதுடெல்லி:

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பத்தாண்டு காலம் நாட்டின் பிரதமராக பதவி வகித்தவர் மன்மோகன் சிங்.

ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னராக பதவி வகித்த பொருளாதார வல்லுனரான மன்மோகன் சிங், உலகப் பொருளாதர மந்தநிலையை சந்தித்த காலத்திலும் இந்தியாவின் பொருளாதாரம் மிகப்பெரிய பின்னடைவை சந்திக்காமல் சமாளித்தார்.

ஆட்சி நிர்வாகத்திறனில் மிகப்பெரிய ஆளுமையாக திகழ்ந்தாலும் பாராளுமன்ற மக்களவை பொதுமக்களை சந்தித்து போட்டியிடாமல் மேல்சபை எனப்படும் ராஜ்யசபை உறுப்பினராக அவர் அசாம் மாநிலத்தில் இருந்து தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டு வந்துள்ளார்.



இந்நிலையில், இந்தமுறை ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து பாராளுமன்ற ராஜ்யசபை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வரும் 13-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

இதற்காக டெல்லியில் இருந்து ஜெய்ப்பூர் வரும் மன்மோகன் சிங், ராஜஸ்தான் சட்டசபை சபாநாயகரிடம் 13-ம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.

1991 முதல் 2019 வரை தொடர்ந்து 5 முறை அசாம் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபைக்கு தேர்வு செய்யப்பட்ட மன்மோகன் சிங் 2004 முதல் 2014 வரை நாட்டின் பிரதமராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆறாவது முறையாக தற்போது ராஜ்யசபைக்கு தேர்வு செய்யப்படும் இவரது பதவிக்காலம் 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நிறைவடையும்.

Tags:    

Similar News