செய்திகள்
மீட்கப்பட்ட குழந்தையுடன் தாய், தந்தை உள்ளனர்.

திருப்பதியில் சென்னை பக்தரின் 9 மாத பெண் குழந்தை கடத்தல் - பெண் கைது

Published On 2019-08-09 06:11 GMT   |   Update On 2019-08-09 06:11 GMT
திருப்பதியில் சென்னை பக்தரின் 9 மாத பெண் குழந்தையை கடத்த முயன்ற பெண்ணை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமலை:

சென்னையை சேர்ந்தவர் சுப்பையா ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர். இவர் தன்னுடைய மகன் மணிகண்டன், மணிகண்டனின் மனைவி மற்றும் அவர்களது 9 மாத பெண் குழந்தை உள்பட 5 பேருடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய நேற்று முன்தினம் ரெயிலில் வந்தனர்.

திருப்பதி வந்த அவர்கள் யாத்ரிகர்கள் சமுதாய கூடத்தில் 955-வது எண் லாக்கரில் பொருட்களை வைத்து விட்டு தூங்கினர். நள்ளிரவு அங்கு வந்த பெண் ஒருவர் தூங்கி கொண்டிருந்த மணிகண்டனின் 9 மாத பெண் குழந்தையை தூக்கி கொண்டு ஓட்டம் பிடித்தார்.

அங்கிருந்த பெண் சவர தொழிலாளி பெண் ஒருவர் குழந்தையை தூக்கி செல்வதை கண்டு கூச்சலிட்டார். இதனால் கண் விழித்த சுப்பையா குடும்பத்தினர் கண்விழித்து பார்த்தபோது அருகில் படுத்திருந்த குழந்தையை காணவில்லை.

இதையடுத்து குழந்தையை தூக்கி சென்ற பெண்ணை மடக்கி பிடித்தனர். பின்னர் அந்த பெண்ணை திருப்பதி-2 டவுன் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் நெல்லூரை சேர்ந்த பத்மா என தெரிய வந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையை ஏன் கடத்தினார். கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளவரா? ஏற்கனவே குழந்தை கடத்தலில் ஈடுபட்டுள்ளாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் குழந்தைகள் அடிக்கடி கடத்தப்பட்டு வரும் சம்பவம் பக்தர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Tags:    

Similar News