செய்திகள்
ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநருடன் உமர் அப்துல்லா சந்திப்பு
ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக்கை தேசிய மாநாட்டு கட்சி தலைவரும், முன்னாள் முதல் மந்திரியுமான உமர் அப்துல்லா இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால், அம்மாநிலத்துக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படலாம் என வதந்திகள் பரவின. ஆனால், மத்திய அரசு இந்த தகவலை திட்டவட்டமாக மறுத்தது. அமர்நாத் யாத்திரை நேற்று திடீரென நிறுத்தப்பட்ட நிலையில் காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இதற்கிடையே, காஷ்மீர் மாநிலத்தை மூன்றாக பிரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் இன்று காலை முதல் தகவல்கள் பரவின. கலவர தடுப்பு பிரிவு போலீசாரும் ஸ்ரீநகரின் முக்கிய இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக்கை முன்னாள் முதல் மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான உமர் அப்துல்லா ராஜ்பவனில் இன்று சந்தித்து பேசினார். அப்போது, காஷ்மீரில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து உமர் அப்துல்லா ஆலோசனை நடத்தினார்.