செய்திகள்
கர்நாடகா - கார், டேங்கர் லாரி மோதிய விபத்தில் 4 பேர் பலி
கர்நாடகாவில் டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலத்தில் தக்ஷினா கன்னடா மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த காரில் மொத்தம் 12 பேர் பயணம் செய்தனர். பிரமா ஹர்கோட்லு என்ற பகுதியில் உள்ள சுங்கச்சாவடி அருகே கார் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த டேங்கர் லாரி மீது நேருக்கு நேர் மோதியது.
இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.