செய்திகள்
சீதாராம் யெச்சூரி

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக பாராளுமன்றத்தில் பேசுவோம்- சீதாராம் யெச்சூரி பேட்டி

Published On 2019-06-30 22:04 GMT   |   Update On 2019-06-30 22:04 GMT
தமிழக மக்களை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக பாராளுமன்றத்தில் பேசுவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி திருச்சி விமான நிலையத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி டெல்டா பகுதியில் அமைக்கப்பட இருக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். இதனால் தமிழக மக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என்பதில் சந்தேகம் இல்லை. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறை அனுமதி வழங்க கூடாது.

தமிழக மக்களின் கருத்துக்களை கேட்காமல் இந்த திட்டத்தை அமல்படுத்தக் கூடாது. இது மட்டும் அல்ல தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையும் மக்களிடம் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் மத்திய, மாநில அரசுகள் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. எனவே இந்த 2 பிரச்சினைகள் பற்றியும் பாராளுமன்றத்தில் பேசுவோம்.

நடந்து முடிந்துள்ள பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரை தமிழ்நாட்டில் இடதுசாரிகள் நான்கு இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். இந்தியா முழுவதும் வலதுசாரிகள் ஒன்று சேர்ந்து வெற்றி பெற்றுள்ளார்கள். அவர்களுக்கு எதிராக இடதுசாரிகள் இருப்போம்.

உள்ளாட்சி தேர்தல் குறித்து மாநில கம்யூனிஸ்டு கட்சி முடிவெடுக்கும். தமிழகத்தில் நீண்ட காலமாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. முதலில் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை அவர்கள் வெளியிடட்டும்.

இரண்டு இடதுசாரி கட்சிகளும் எப்போது ஒன்றாக இணையும் என கேட்கிறீர்கள். எப்போது ஒன்றாக இணையும் என்பது முக்கியம் அல்ல. மக்கள் பிரச்சினைகளில் நாங்கள் இணைந்து தான் போராடுகிறோம். ஒருவருக்கொருவர் ஒத்துழைப்போடு பணியாற்றி வருகிறோம் என்பது தான் உண்மை.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News