செய்திகள்
அரியானா மாநில காங்கிரஸ் செய்திதொடர்பாளர் சுட்டுக்கொலை- ராகுல் கண்டனம்
அரியானா மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் விகாஸ் சவுத்திரி இன்று மர்மநபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
பரிதாபாத்:
அரியானா மாநில காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருப்பவர் விகாஸ் சவுத்திரி. இவர் இன்று காலை பரிதாபாத்தில் உள்ள ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்துவிட்டு, வீடு திரும்ப காரில் ஏறினார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவர்மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடினர். துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் அங்கு வந்து விகாஸ் சவுத்திரியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் 2 பேர் துப்பாக்கிச்சூடு நடத்தியது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். பட்டப்பகலில் அரசியல் தலைவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டது, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்செயலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இது அரியானாவில் மோசமடைந்து வரும் சட்டம் ஒழுங்கு நிலைமையை பிரதிபலிக்கிறது என அவர் குற்றம் சாட்டினார்.