செய்திகள்
வயல் சகதியில் ஆடிப்பாடி பருவமழையை வரவேற்ற கர்நாடக மக்கள்
கர்நாடகாவில் பருவமழையை வரவேற்கும் விதமாக மக்கள் வயல் சகதியில் நடனமாடியது காண்போரை வெகுவாக கவர்ந்தது.
மங்களூரு:
மங்களூருவின் பவஞ்சே கிராமத்தில் கேசர்ட் ஓஞ்சி தினா எனும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பருவமழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும் என்ற நோக்கில் பாரம்பரியமாக இந்த நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
இதில் விவசாய விளைநிலங்களில் ஓட்டப்பந்தயம், கயிறிழுத்தல், உறியடித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. ஆண்கள், பெண்கள் ஆகியோருக்கு தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றன.
ஏராளமான சிறுவர், சிறுமியர், இளைஞர்கள், இளம்பெண்கள் பங்கேற்று சேற்றில் உற்சாகமாக விளையாடி மகிழ்ந்தனர். சேற்றில் பாரம்பரிய நடனமாடியது காண்போரை கவர்ந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு சுவைமிக்க பாரம்பரிய உணவுகள் பரிமாறப்பட்டன.