செய்திகள்
புதுச்சேரி அமைச்சரவை கொள்கை முடிவுகளை எடுக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு
புதுச்சேரி அமைச்சரவை கொள்கை ரீதியிலான முடிவுகளை எடுக்க விதிக்கப்பட்ட தடையை, ஜூலை 10 வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:
புதுச்சேரி நிர்வாகத்தில் கவர்னருக்கு அதிகாரம் இல்லை என சென்னை ஐகோர்ட் விதித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை அமல்படுத்தக்கூடாது என்றும் கவர்னர் கிரண்பேடி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு கடந்த 4-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கிரண்பேடியின் கோரிக்கையை நிராகரித்தனர். மேலும் புதுச்சேரி அமைச்சரவை கொள்கை முடிவை அமல்படுத்த 10 நாட்கள் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இடைக்கால தடையை நீக்க வேண்டும் என்ற புதுச்சேரி அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. புதுச்சேரி அமைச்சரவை கொள்கை ரீதியிலான முடிவுகளை எடுக்க விதிக்கப்பட்ட தடை ஜூலை 10 வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.