செய்திகள்

பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியா கைதுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்- ஜாமீனில் விட உத்தரவு

Published On 2019-06-11 07:03 GMT   |   Update On 2019-06-11 07:56 GMT
பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியாவை கைது செய்து நீதிமன்றக் காவலில் வைத்ததை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது. அவரை ஜாமீனில் விடவும் உத்தரவிட்டது.
புதுடெல்லி:

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு வீடியோ வெளியிட்டதாக பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியா கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை 11 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி லக்னோ நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவர் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக கூறி அவரது மனைவி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியாவை கைது செய்து நீதிமன்றக் காவலில் அடைத்ததை நீதிபதிகள் கண்டித்தனர்.

“பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியா கொலைக் குற்றம் செய்துவிட்டாரா? அவதூறு வழக்கிற்காக 11 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்தது தவறு. லக்னோ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தவறான உத்தரவை பிறப்பித்துள்ளது.



உ.பி. முதல்வர் குறித்து கருத்து பதிவிட்டதற்காக பத்திரிகையாளரை கைது செய்ததை சரியானதாக கருதுகிறீர்களா? ஒவ்வொரு தனி நபருக்கும் தனது கருத்தை சதந்திரமாக தெரிவிக்க உரிமை உள்ளது. சில நேரங்களில் சில விஷயங்கள் தவிர்க்கப்பட வேண்டியவைதான், அதற்காக கைது செய்வீர்களா?” என உத்தர பிரதேச அரசுக்கு நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

அத்துடன், பத்திரிகையாளர் பிரசாத் கனோஜியாவை உடனடியாக ஜாமீனில் விடுதலை செய்யும்படி உத்தரவிட்டனர்.

ஆனால், பிரசாந்த் கனோஜியாவை விடுவிக்க உ.பி அரசு தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அவரை விடுவித்தால், அவர் பரப்பிய தகவல் உண்மை என்றாகிவிடும் என அரசுத் தரப்பு வழக்கறிஞர் கூறினார். ஆனால், அவரது வாதத்தை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர்.

Tags:    

Similar News