செய்திகள்

காஷ்மீரில் பள்ளத்தாக்கில் லாரி கவிழ்ந்து 9 பேர் பலி

Published On 2019-06-09 16:30 GMT   |   Update On 2019-06-09 16:30 GMT
காஷ்மீரில் பள்ளத்தாக்கில் லாரி கவிழ்ந்து 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஸ்ரீநகர்:

காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து சிமெண்டு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லே பகுதிக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் ராஜஸ்தானை சேர்ந்த ஏராளமான கூலித்தொழிலாளர்களும் இருந்தனர்.

இந்த லாரி லமயுரு பகுதியில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள ஆழமான பள்ளத்தாக்கில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் லாரி கடுமையாக உருக்குலைந்ததுடன், அதில் இருந்த சிமெண்டு மூட்டைகளும் பள்ளத்தாக்கில் சிதறின.

இந்த கோர விபத்தில், லாரி இடிபாடுகளுக்குள் சிக்கி 9 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் பெண்கள் மற்றும் சிறுவர்களும் அடங்குவர். பலியானவர்கள் அனைவரும் 2 குடும்பங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள காஷ்மீர் போலீசார், விபத்து குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து சம்பவம் லே பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News