செய்திகள்
உ.பி.யில் டிரக் மீது டிராக்டர் மோதி விபத்து- 6 பேர் பலி
உத்தர பிரதேசத்தில் டிரக் மீது டிராக்டர் மோதிய விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
ஹர்டோய்:
உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள சடர்பூர் பகுதியில் 42 பேருடன் சென்ற டிராக்டர் எதிரே வந்த டிரக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிராக்டரில் பயணித்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 16 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஹர்டோய் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் விஷ்ரம் (60), கங்காராம் (50), ஷங்கர் (55), பலக்ராம் (60), ரிஷி குமார் (30), ராஜாராம் (35) ஆகியோர் பலியானதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஒருவர் மேல் சிகிச்சைக்காக லக்னோவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து அப்பகுதியில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.