நான் ஏதும் செய்யவில்லையா... இஸ்ரேலுக்கு மோடியை அழைத்துச் சென்றதை நினைவு கூர்ந்த சரத் பவார்
- சரத் பவார் பெயரை குறிப்பிடாமல் மத்திய மந்திரியாக இருந்த காலத்தில் விவசாயிகளை கண்டு கொள்ளவில்லை.
- விவசாயிகளுக்காக ஒன்றுமே செய்யவில்லை. விவசாயிகளை கைவிட்டு விட்டார் என மோடி விமர்சனம்.
இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர் சரத் பவார். மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இவர் 2004 முதல் 2014 வரை மத்திய விவசாயத்துறை மந்திரியாக இருந்தவர்.
பிரதமர் மோடி மகாராஷ்டிரா உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் மேற்கொள்ளும்போது, சரத் பவார் பெயரை குறிப்பிடாமல் மத்திய மந்திரியாக இருந்த காலத்தில் விவசாயிகளை கண்டு கொள்ளவில்லை. விவசாயிகளுக்காக ஒன்றுமே செய்யவில்லை. விவசாயிகளை கைவிட்டு விட்டார் என விமர்சனம் செய்து வருகிறார்.
அதற்கு பதிலடியாக நெருக்கடியான நேரத்தில் பிரதமர் மோடிக்கு உதவிய பழைய சம்பவம் ஒன்றை சரத் பவார் நினைவு கூர்ந்துள்ளார்.
இது தொடர்பாக சரத் பவார் கூறியதாவது:-
மோடி குஜராத் மாநில முதல்வராக இருந்தபோது, விவசாயத்துறை பிரச்சனைகளை என்னிடம் வந்து தெரிவித்ததுடன், குஜராத்துக்கும் அழைத்துச் சென்றார். ஒருமுறை அவர் இஸ்ரேலுக்கு செல்ல விரும்பியதால் (தனித்துவமான விவசாய நுட்பங்கள் குறித்து தெரிந்து கொள்ள) அவரையும் அங்கு அழைத்துச் சென்றேன். இப்போது நரேந்திர மோடி என்ன சொன்னாலும் நான் கவலைப்படவில்லை.
இவ்வாற சரத் பவார் தெரிவித்துள்ளார்.
மோடி பிரதமரான பின்னர் 2017 ம் ஆண்டு இஸ்ரேல் சென்றார். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இஸ்ரேல் சென்ற முதல் பிரதமர் என்ற பெயரை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.