இந்தியா

ஈரான் அமைச்சருடன் மும்முறை பேச்சுவார்த்தை நடத்திய ஜெய்சங்கர் - பலன் என்ன? - வெளியுறவு அமைச்சகம் சஸ்பென்ஸ் | IRAN

Published On 2026-03-12 20:01 IST   |   Update On 2026-03-12 20:02:00 IST
  • கப்பல்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.
  • கூடுதல் விவரங்களை இப்போதே முழுமையாக வெளியிட முடியாது.

மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அர்கசி உடன் கடந்த சில நாட்களில் மட்டும் மூன்று முறை தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தியுள்ளார்.

இது குறித்து வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் இந்திய கப்பல்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.

குறிப்பாக, அந்தப் பகுதியில் தற்போது சிக்கியுள்ள இரண்டு கப்பல்கள் குறித்த தகவல்களும் ஆலோசிக்கப்பட்டன.

போரினால் இந்தியாவின் எரிசக்தி விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும், எரிபொருள் வரத்து தடையின்றி தொடரவும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தற்போது ஈரானில் சுமார் 9,000 இந்தியர்கள் வசிக்கின்றனர். இதில் மாணவர்கள், மாலுமிகள், தொழிலதிபர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அடங்குவர்.

மத்திய அரசின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து, ஈரானில் வசித்து வந்த இந்தியர்களில் பலரும் ஏற்கனவே தாய்நாட்டிற்குத் திரும்பியுள்ளனர்.

அங்குள்ள இந்தியர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியத் தூதரகம் தொடர்ந்து வழங்கி வருகிறது.

தற்போதைய சூழலில் ஷிப்பிங் மற்றும் எரிசக்தி பாதுகாப்பு தொடர்பான கூடுதல் விவரங்களை இப்போதே முழுமையாக வெளியிட முடியாது" என்று தெரிவித்தார். 

முன்னதாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்திய கப்பல்கள் மட்டும் செல்ல ஈரான் அனுமதித்ததாக செய்தி பரவியது. ஆனால் ஈரான் இதனை மறுத்தது. 

இதற்கிடையே ஈரானிய தாக்குதலில் இருந்து தப்பித்து மத்திய கிழக்கில் இருந்து எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் மும்பை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

Tags:    

Similar News