மோடி பீதியில் உள்ளார் - ராகுல் காந்தி.. பாராளுமன்ற வளாகத்தில் சிலிண்டர் தட்டுப்பாட்டை எதிர்த்து போராட்டம் | LPG
- உணவகங்கள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
- அவர் முற்றிலும் வேறுபட்ட காரணங்களுக்காக அச்சம் கொண்டுள்ளார்.
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் காரணமாக வளைகுடாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. எண்ணெய் ஏற்றுமதிக்கு பிரதான பாதையாக இருந்து வந்த ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது.
இதனால் இந்தியாவில் எண்ணெய் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவுகிறது. கடந்த வாரம் வீட்டு உபயோக சிலிண்டர் விலை நள்ளிரவில் 60 ரூபாய் உயர்த்தப்பட்டது. மேலும் வணிக சிலிண்டர் விநியோக நிறுத்தத்தால் சென்னை, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உணவகங்கள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
இந்த சூழலில் நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடர் 2 ஆம் அமர்வு கடந்த 9 ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. இன்றைய கூட்டத்தின்போது பாராளுமன்ற வளாகத்தில் சிலிண்டர் தட்டுப்பாடுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராகுல் காந்தி உள்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதன்போது ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசியதாவது, சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம் என்று பிரதமர் மோடி கூறுகிறார். ஆனால், பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்.
ஆனால் அவர் முற்றிலும் வேறுபட்ட காரணங்களுக்காக அச்சம் கொண்டுள்ளார். அதானி வழக்கு, எப்ஸ்டீன் கோப்புகள் உள்ளிட்ட பல காரணங்களால் அவர் பயத்தில் உள்ளார். மக்களவைக்குள் கூட அவரால் வர முடியவில்லை. ஆனால் அவர் மக்களை பீதியடைய வேண்டாம் என்று சொல்கிறார். நேற்று கூட பிரதமர் மோடியின் இருக்கை காலியாக இருந்தது" என்று தெரிவித்தார்.