LPG சிலிண்டர்கள் முன்பதிவு குறித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியீடு
- 25,000 விநியோகஸ்தர்கள் தடையின்றி செயல்பட்டு வருகின்றனர்.
- கூடுதலாக 48,000 கிலோ லிட்டர் மாநிலங்களுக்கு வழங்கப்படும்.
சமையல் எரிவாயு தட்டுப்பாடு குறித்துப் பரவி வரும் செய்திகள் தவறானவை என்றும், மக்கள் தேவையின்றிப் பதற்றமடைந்து சிலிண்டர்களை முன்பதிவு செய்ய வேண்டாம் என்றும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
மத்திய பெட்ரோலிய அமைச்சக இணைச் செயலாளர் சுஜாதா சர்மா இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டார்.
அவர் கூறுகையில், அரசின் உத்தரவைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களில் மட்டும் எல்பிஜி உற்பத்தி 28% உயர்த்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள 1 லட்சம் சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் 25,000 விநியோகஸ்தர்கள் தடையின்றி செயல்பட்டு வருகின்றனர்.
எந்த இடத்திலும் இருப்பு தீர்ந்து (Dry out) போகவில்லை. வணிக ரீதியான எல்பிஜி பயன்பாட்டிற்காக மாநில அரசுகளுடன் இணைந்து சிலிண்டர்களை வெளியிட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எல்பிஜி மீதான அழுத்தத்தைக் குறைக்க, மண்ணெண்ணெய் விநியோகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்ட 1 லட்சம் கிலோ லிட்டர் மண்ணெண்ணெயுடன் கூடுதலாக 48,000 கிலோ லிட்டர் மாநிலங்களுக்கு வழங்கப்படும்.
ஒவ்வொரு காலாண்டிலும் மாநிலங்களுக்கு வழக்கமாக ஒதுக்கப்படும் மண்ணெண்ணெய் அளவை விட இப்போது அதிக ஒதுக்கீடு செய்யப்படுவதால், சமையல் எரிவாயு மற்றும் இதர எரிபொருட்களுக்குப் பற்றாக்குறை வராது.
மக்கள் அச்சத்தின் காரணமாகப் பலமுறை சிலிண்டர்களை முன்பதிவு செய்வதால், முன்பதிவு எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதுவே தற்காலிக நெரிசலுக்குக் காரணம்.
விநியோகத்தில் சிறிய இடைவெளி இருந்தாலும், பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.