இந்தியா

பத்ரிநாத், கேதார்நாத் கோவில்களில் 'சனாதனிகள்' அல்லாதோர் நுழைய அதிரடி தடை! | Sanatan

Published On 2026-03-12 17:52 IST   |   Update On 2026-03-12 17:52:00 IST
  • தெய்வங்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருக்க வேண்டும்.
  • நெற்றியில் திலகம் இடுபவர்களாக இருக்க வேண்டும்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள பத்ரிநாத், கேதார்நாத் கோவில்களுக்கு இந்துக்கள் வருடந்தோறும் புனித பயணம் மேற்கொள்வதுண்டு.

இந்த கோவில்கள் உட்பட அப்பகுதிகளில் உள்ள 47 கோயில்களை பத்ரிநாத், கேதார்நாத் கோவில் கமிட்டி (BKTC) நிர்வகிக்கிறது.

இந்நிலையில் அண்மையில் BKTC கமிட்டி கூட்டத்தில் முக்கிய முடிவு ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் உள்ளிட்ட 47 கோயில்களின் புனிதத்தைப் பாதுகாப்பதற்காக, சநாதன தர்மத்தைப் பின்பற்றாதவர்கள் இனி இந்தத் திருத்தலங்களுக்குள் நுழையத் தடை விதிக்கும் திட்டத்திற்கு கமிட்டி முறைப்படி ஒப்புதல் அளித்துள்ளது.

இவை சுற்றுலாத் தலங்கள் அல்ல, இவை நம்பிக்கையின் மையங்கள். இந்த முடிவு அனைத்துப் பார்வையாளர்களையும் ஒட்டுமொத்தமாகத் தடை செய்வது அல்ல, மாறாகப் பாரம்பரிய நடைமுறைகளை முறைப்படுத்துவதாகும் என்று BKTC தலைவர் ஹேமந்த் திவேதி தெரிவித்துள்ளார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 25-வது பிரிவின்படி, சீக்கியர்கள், சமணர்கள் மற்றும் பௌத்த மதத்தைப் பின்பற்றுபவர்கள் 'சனாதன' பிரிவின் ஒரு பகுதியாகக் கருதப்படுவதால், அவர்களும் இந்தக் கோயில்களுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.

தெய்வங்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்கள், நெற்றியில் திலகம் (குங்குமம்) இடுபவர்கள் மற்றும் புனித பாடல்களை (Chailsa) ஓதத் தெரிந்தவர்கள் சனாதனிகளாக கருதப்படுவார்கள்.

இந்தக் கட்டுப்பாடு கருவறை மற்றும் கோயில் வளாகத்திற்கு மட்டுமே பொருந்தும். மலைப்பகுதிகளில் போக்குவரத்து அல்லது பிற சேவைகளில் ஈடுபட்டுள்ள இந்துக்கள் அல்லாத தொழிலாளர்களை இது பாதிக்காது.

புதிய விதிகளைச் செயல்படுத்த, பக்தர்களின் பதிவு நடைமுறையில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

புனிதப் பயணத்திற்கான பதிவுச் செயல்முறையில் ஆதார் அட்டைத் தகவல்கள் பயன்படுத்தப்பட்டு, பக்தர்களின் பின்னணி சரிபார்க்கப்படும்.

BKTC-ன் கீழ் உள்ள 47 கோயில்களின் நுழைவு வாயில்களில் கடுமையான கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.

 இந்த விதிகள் வரும் ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ள 'சார் தாம் யாத்திரை' காலத்திலிருந்தே அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு கேதார்நாத், ஏப்ரல் 22 அன்றும், பத்ரிநாத், ஏப்ரல் 23 அன்றும் பக்தர்களுக்காகத் திறக்கப்படவுள்ளன.

Tags:    

Similar News