செய்திகள்
தமிழை போற்றி வளர்க்க மத்திய அரசு முன்னின்று ஆதரிக்கும் - நிர்மலா சீதாராமன்
தொன்மையான தமிழ் மொழியை போற்றி வளர்க்க மத்திய அரசு முன்னின்று ஆதரிக்கும் என நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
மத்திய அரசுக்கு கஸ்தூரி ரங்கன் குழு தற்போது புதிய கல்விக் கொள்கையை பரிந்துரைத்துள்ளது. அதில் அனைத்து மாநிலங்களும் தாய்மொழி, ஆங்கிலம் ஆகியவற்றுடன் இந்தி மொழியை கட்டாயம் படிக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரை இணையதளத்தில் வெளியிடப்பட்டு, பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்படுகின்றன.
இந்தி பேசாத மாநிலங்களில் இந்த கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.
இந்நிலையில், தமிழை போற்றி வளர்க்க மத்திய அரசு ஆதரிக்கும் என நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், மக்கள் கருத்துக்களை கேட்டறிந்த பின்பே கல்வி குழுவின் வரைவு அறிக்கை அமல்படுத்தப்படும். பிரதமர் அனைத்து இந்திய மொழிகளையும் வளர்க்க விரும்பியே “ஒரே பாரதம் உன்னத பாரதம்” என்ற முயற்சியை துவக்கினார். தொன்மையான தமிழை போற்றி வளர்ப்பதற்கு மத்திய அரசு முன்னின்று ஆதரிக்கும் என குறிப்பிட்டுள்ளார்