செய்திகள்

சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் டெல்லி வந்தார் - விமான நிலையத்தில் பிரதமர் மோடி உற்சாக வரவேற்பு

Published On 2019-02-19 16:02 GMT   |   Update On 2019-02-19 16:02 GMT
இருநாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்த சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை, டெல்லி விமான நிலையத்தில் பிரதமர் மோடி உற்சாகமாக வரவேற்றார். #SaudiArabiaCrown #MohammedBinSalman #India
புதுடெல்லி:

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், முதலாவது அரசுமுறை பயணமாக பாகிஸ்தான், இந்தியா, மலேசியா, இந்தோனேசியா ஆகிய 4 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தியாவில் இரண்டு நாட்கள் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

பாகிஸ்தான் பயணத்தை நிறைவு செய்து தனி விமானம் மூலம் இன்று இரவு சுமார் 9 ம்ணியளவில் டெல்லி வந்து சேர்ந்த சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை டெல்லி விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி உற்சாகமாக வரவேற்றார். மேலும், வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.கே.சிங் மலர்ச்செண்டு அளித்து வரவேற்றார்.
 
பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்ட தலைவர்களை சவுதி இளவரசர் சந்தித்துப் பேசுகிறார். இந்த சந்திப்பின் போது, பயங்கரவாத எதிர்ப்பு, எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடக்கிறது.

இளவரசரின் இந்திய வருகையால், இந்தியா-சவுதி இடையிலான உறவுகள் மேலும் வலுவடையும் வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பு ஏற்பட்டு உள்ளதாக இந்தியாவுக்கான சவுதி தூதர் சவுத் முகமது அல் சவுதி கூறினார். வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மை தொடர்பான எங்கள் பொதுவான நாட்டத்தின் அடிப்படையில் மிகவும் முக்கியமான கூட்டாளியாகவும், மதிப்பு மிக்க நண்பராகவுமே இந்தியாவை சவுதி அரேபியா பார்ப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். #SaudiArabiaCrown #MohammedBinSalman #India 
Tags:    

Similar News