செய்திகள்
இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவை கடும் பாதிப்பு- 30 விமானங்கள் ரத்து?
செயல்பாட்டு காரணங்கள், மோசமான வானிலை உள்ளிட்ட காரணங்களால் இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. #FlightsDelayed
மும்பை:
மும்பை உள்ளிட்ட வடமாநிலங்களில் கடுமையான குளிர் வாட்டி வதைக்கிறது. கடந்த சில தினங்களாக பனிப்பொழிவு மற்றும் பனிமூட்டமும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. விடிந்து வெகுநேரம் ஆகியும் பனி விலகாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சாலையில் வாகனங்களை இயக்குகின்றனர்.
இந்நிலையில் மோசமான வானிலை, செயல்பாட்டு காரணங்கள், விமானிகள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து புறப்படும் 8 விமானங்கள், ஐதராபாத்தில் இருந்து புறப்படும் 6 விமானங்கள் , ஜெய்பூரில் இருந்து புறப்படும் 3 விமானங்கள் கடந்த சனிக்கிழமை அன்று ரத்து செய்யப்பட்டன.
இதேபோல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இண்டிகோ நிறுவனத்தின் 30 விமானங்கள் இன்று ரத்து செய்யப்படலாம் என தெரிகிறது.
மேலும் ஒரு வருடத்திற்கு 1,000 மணி நேரத்திற்குமேல் ஒரு விமானி செயல்பட இயலாது என்பதால், விமானிகளுக்கான தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இது இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
விமான சேவையை மீண்டும் தொடர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளி அன்று கடுமையான ஆலங்கட்டி மழை பெய்ததால் 11 விமானங்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. #FlightsDelayed