செய்திகள்

பாஜக ஆட்சியில் உலகின் மிக முக்கியப் பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது- பட்ஜெட் உரையில் தகவல்

Published On 2019-02-01 06:18 GMT   |   Update On 2019-02-01 06:18 GMT
உலகின் மிக முக்கியப் பொருளாதார நாடாக இந்தியா கடந்த 5 ஆண்டுகளில் உருவாகியுள்ளதாக நிதி மந்திரி பியூஷ் கோயல், பட்ஜெட் உரையில் குறிப்பிட்டார். #Budget2019 #BudgetSession #PiyushGoyal
புதுடெல்லி:

பாராளுமன்ற மக்களவையில் இன்று இடைக்கால மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதி மந்திரி பொறுப்பு வகிக்கும் பியூஷ் கோயல் காலை 11 மணிக்கு, எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். பட்ஜெட் உரையில் அவர் கூறியதாவது:-

நாடு இப்போது முன்னேற்றப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. புதிய இந்தியா 2020 என்ற இலக்கை நோக்கி நாடு வெற்றிகரமாக முன்னேறி வருகிறது.  சுகாதாரம், குடிநீர் ஆகியவற்றில் நாடு கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளது.

விவசாயிகளின் வருவாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. உலக பொருளாதாரத்தில் மிகச்சிறப்பாக செயல்படும் நாடாக இந்தியா விளங்குகிறது. உலகின் மிக முக்கியப் பொருளாதார நாடாக இந்தியா கடந்த 5 ஆண்டுகளில் உருவாகியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் பொருளாதார சீர்திருத்தங்கள் விரைவாக மேற்கொள்ளப்பட்டன. வங்கித்துறை சீர்திருத்தங்கள் சிறந்த பலனைத் தரத் தொடங்கியுள்ளன.



பணவீக்க விகிதம் இரட்டை இலக்கத்தில் இருந்த நிலை மாறி இப்போது மிகவும் குறைந்துள்ளது. மக்களின் கனவுகளை நனவாக்க மத்திய பாஜக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.  7 ஆண்டுகளுக்கு முன் இருந்த 6% நிதிப் பற்றாக்குறை இப்போது 3% ஆக குறைந்துள்ளது. வங்கித்துறை சீர்திருத்தங்களால் வாராக்கடன் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ரூ.3 லட்சம் கோடி வங்கி வாராக்கடன் வசூலிக்கப்பட்டுள்ளது. எவ்வளவு பெரிய தொழிலதிபர்கள் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

கட்டுமானத்துறை சட்டம், பினாமி தடுப்பு சட்டம் ஆகியவை ஊழலைத் தடுத்துள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் மக்களிடம் மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. நிலக்கரி மற்றும் ஸ்பெக்ட்ரம் ஏலம் வெளிப்படையாக நடத்தப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.  #Budget2019 #BudgetSession #PiyushGoyal

Tags:    

Similar News