செய்திகள்

நாளை நடைபெறுவதாக இருந்த அயோத்தி வழக்கு விசாரணை திடீர் ரத்து

Published On 2019-01-27 22:16 GMT   |   Update On 2019-01-27 22:16 GMT
நாளை நடைபெறுவதாக இருந்த விசாரணை திடீரென ரத்து செய்யப்படுவதாக சுப்ரீம் கோர்ட்டு பதிவாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள நோட்டீசில் கூறப்பட்டு உள்ளது. #AyodhyaCase #SupremeCourt
புதுடெல்லி:

அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்மபூமி-பாபர் மசூதி நில உரிமை தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை விசாரிப்பதற்கு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அமர்வு முன் நாளை (செவ்வாய்க்கிழமை) இந்த வழக்கு விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் இந்த அமர்வில் இடம்பெற்றுள்ள நீதிபதி எ.ஏ.பாப்டேவுக்கு நாளைய விசாரணையில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது. எனவே நாளை நடைபெறுவதாக இருந்த விசாரணை திடீரென ரத்து செய்யப்படுவதாக சுப்ரீம் கோர்ட்டு பதிவாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள நோட்டீசில் கூறப்பட்டு உள்ளது.

முன்னதாக கடந்த 10-ந் தேதி இந்த வழக்கு, விசாரணைக்கு வந்த போது, அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதி யு.யு.லலித், வழக்கில் இருந்து விலகிக்கொண்டார். எனவே புதிய அமர்வு அமைப்பதற்காக இந்த வழக்கின் விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.

பின்னர் மற்றொரு நீதிபதி என்.வி.ரமணாவும் அமர்வில் இருந்து விடுவிக்கப்பட்டு புதிய அமர்வு உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த அமர்வில் தலைமை நீதிபதியுடன், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ.நசீர் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.  #AyodhyaCase #SupremeCourt 
Tags:    

Similar News