செய்திகள்

தெலுங்கானா சட்டசபை தேர்தல் - அமித் ஷா நாளை சூறாவளி பிரசாரம்

Published On 2018-11-24 14:43 GMT   |   Update On 2018-11-24 14:43 GMT
சட்டசபை தேர்தலை எதிர்நோக்கியுள்ள தெலுங்கானா மாநிலத்தில் நாளை சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பா.ஜ.க. தலைவர் அமித் ஷா 4 பொதுக்கூட்டங்களில் பேசி வாக்கு சேகரிக்கிறார். #AmitShah #Telanganaelection
ஐதராபாத்:

119 இடங்களை கொண்ட தெலுங்கானா மாநில சட்டசபைக்கு டிசம்பர் 7-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க., தெலுங்கானா ராஷ்டரிய சமிதி, காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.

சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்திக்கிறது. கலைக்கப்பட்ட சட்டசபையில் 5 உறுப்பினர்களை மட்டுமே பெற்றிருந்த பா.ஜ.க. இந்த தேர்தலில் தனித்து களமிறங்கியுள்ளது.

வாக்குப்பதிவுக்கு இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில் மாநிலம் முழுவதும் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.


இந்நிலையில்,  நாளை (ஞாயிற்றுக்கிழமை ) இங்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா  பொதுக்கூட்டங்களில் பேசி வாக்கு சேகரிக்கிறார்.

பரக்கலா, நிர்மல், நாராயணகெட் மற்றும் டுபாக்கா பகுதிகளில் நடைபெறும் பிரசார கூட்டங்களில் பங்கேற்று பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி பேசுகிறார்.

கடந்த மாதம் 15-ம் தேதி இங்குள்ள மஹபூப்நகர் பகுதியில் தனது முதல்கட்ட பிரசாரத்தை தொடங்கிய அமித் ஷா, வரும் 28 மற்றும் டிசம்பர் 2-ம் தேதி மேலும்  சில பகுதிகளில் பிரசாரம் செய்து ஆதரவு திரட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. #AmitShah  #Telanganaelection
Tags:    

Similar News