செய்திகள்

8 ரெயில் நிலையங்களை குண்டு வைத்து தகர்ப்போம் - லஷ்கர் பயங்கரவாதிகள் மிரட்டல்

Published On 2018-09-26 05:18 GMT   |   Update On 2018-09-26 05:18 GMT
அரியானாவில் உள்ள 8 ரெயில் நிலையங்களை குண்டு வைத்து தகர்ப்போம் என்று லஷ்கர் பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். #bombthreat #Railwaystation

அம்பாலா:

பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்படும் லஷ்கர்-இ- தொய்பா பயங்கரவாதிகள் இந்தியாவில் மிகப் பெரிய தாக்குதலை நடத்தப் போவதாக அடிக்கடி மிரட்டியபடி உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று அவர்கள் எழுதியதாக கூறப்படும் மர்ம கடிதம் ஒன்று அரியானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலா கண்டோன்மெண்ட் ரெயில் நிலையத்துக்கு நேற்று ஒரு கடிதம் வந்தது. பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் இருந்து அந்த கடிதம் வந்திருந்தது.

அதில், “கண்டோன்மெண்ட் ரெயில் நிலையத்தில் அக்டோபர் 20-ந்தேதி குண்டுகள் வைத்து தகர்ப்போம்” என்று மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி அதே தினத்தன்று சகரன்பூர், ஜாக்கல், கிஷார், கர்னல், ரோதக், பானிப்பட், ஜெகத்ரீ ஆகிய ரெயில் நிலையங்களையும் தகர்க்கப் போவதாக கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.

லஷ்கர் பயங்கரவாதிகள் இந்த மிரட்டல் கடிதத்தை அனுப்பியதாக பாதுகாப்பு படையினர் சந்தேகிக்கிறார்கள். இதையடுத்து இந்த கடிதத்தை தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

இதற்கிடையே அரியானாவில் உள்ள ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. #bombthreat #Railwaystation

Tags:    

Similar News