இந்தியா

'படுதோல்வியடைந்த தேர்தல் ஆணையம்': பாஜகவின் விளம்பரங்களுக்கு தடை விதித்த உயர்நீதிமன்றம்

Published On 2024-05-20 16:53 IST   |   Update On 2024-05-20 16:53:00 IST
  • தனக்கான கடமையில் தேர்தல் ஆணையம் கேவலமாக தோற்றிருக்கிறது.
  • தேர்தல் ஆணையம் செயல்படவில்லை எனில், நீதிமன்றம் தலையிட வேண்டி வரும்.

திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான எவ்வித இழிவான விளம்பரங்களையும் பாஜக வெளியிட கூடாது என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் குறித்து அவதூறு செய்யும் வகையில் பாஜக இழிவான விளம்பரங்களை வெளியிட்டு வருவதற்கு எதிராக அக்கட்சி கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணையில், "திரிணாமுல் காங்கிரஸை கொச்சைப்படுத்தும் வகையில் பாஜக வெளியிட்ட விளம்பரங்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை. தனக்கான கடமையில் தேர்தல் ஆணையம் கேவலமாக தோற்றிருக்கிறது. தேர்தல் ஆணையம் செயல்படவில்லை எனில், நீதிமன்றம் தலையிட வேண்டி வரும் என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

திரிணாமுல் காங்கிரஸின் புகாரை, தேர்தல் ஆணையம் உரிய நேரத்திற்குள் தீர்த்திருக்க வேண்டும். தேர்தலுக்கு பின் புகார்களை தீர்ப்பது நீதிமன்றத்தின் வேலை இல்லை" எனவும் நீதிபதி காட்டமாக தெரிவித்துள்ளார்.

தேர்தல்களின் போது, ஊடகங்கள் எந்தவொரு வேட்பாளர் அல்லது அரசியல் கட்சிக்கு எதிராக நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சரிபார்க்கப்படாத தகவல்களை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், பாஜகவுக்கு எதிரான புகார்களை கிடப்பில் போடும் தேர்தல் ஆணையம் தூங்கிக் கொண்டிருக்கிறது என்கிற அர்த்தத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மஹுவா மொய்த்ரா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், "தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கின் முகவரி @ECISVEEP என்பதிலிருந்து ECISLEEP என மாற்றப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News