செய்திகள்

காங்கிரசுக்காக நடிகை விஜயசாந்தி தீவிர பிரசாரம் செய்வார்- ராகுல்காந்தி அறிவிப்பு

Published On 2018-09-20 06:41 GMT   |   Update On 2018-09-20 08:27 GMT
நடிகை விஜயசாந்தி தெலுங்கானா பிரசார களத்தில் நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்துடன் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று ராகுல் அறிவித்துள்ளார். #Congress #RahulGandhi #Vijayashanti
ஐதராபாத்:

தெலுங்கானாவில் சந்திரசேகரராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியின் ஆட்சி நடந்து வந்தது.

அங்கு முன் கூட்டியே தேர்தலை சந்திக்கும் வகையில் சமீபத்தில் சட்டசபையை சந்திரசேகரராவ் கலைத்தார். இதனால் தெலுங்கானா மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடத்த தலைமை தேர்தல் கமி‌ஷன் தயாராகி வருகிறது.

தெலுங்கானாவில் இப்போது தேர்தல் நடந்தால் சந்திரசேகரராவ் அமோக வெற்றி பெறுவார் என்று அடுத்தடுத்து வந்த கருத்துக் கணிப்புகளில் தெரிய வந்தது. தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சிக்கு பா.ஜ.க. ஆதரவு அளிக்கும் என்று தெரிகிறது.


இதையடுத்து காங்கிரஸ் கட்சியும் தெலுங்கானா தேர்தலை எதிர்கொள்ள தீவிரம் காட்டி வருகிறது. தெலுங்கானா காங்கிரசாரை உற்சாகப்படுத்தும் வகையில் புதிய கமிட்டிகளை உருவாக்கி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அறிவித்துள்ளார்.

மொத்தம் 10 குழுக்களை ராகுல்காந்தி உருவாக்கி இருக்கிறார். பிரசார கமிட்டி தலைவராக மல்லுப்பட்டி விக்ரமர்கா அறிவிக்கப்பட்டுள்ளார்.

தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் உத்தம்குமார் ரெட்டி தலைமையில் 14 பேர் கொண்ட தேர்தல் கமிட்டி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பொறுப்பை முன்னாள் துணை முதல்-மந்திரி ராஜ நரசிம்மாவிடம் ராகுல் ஒப்படைத்துள்ளார்.

தேர்தல் பிரசார ஒருங்கிணைப்பு குழுவில் மொத்தம் 50 தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர். யார்-யார் பிரசாரம் செய்ய வேண்டும் என்ற பட்டியலையும் ராகுல் அறிவித்துள்ளார்.

நடிகை விஜயசாந்திக்கு பிரசாரத்தில் முக்கியத்துவம் அளிக்க ராகுல் உத்தரவிட்டுள்ளார். விஜயசாந்தி தெலுங்கானா பிரசார களத்தில் நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்துடன் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று ராகுல் அறிவித்துள்ளார்.

இதனால் தெலுங்கானா காங்கிரசார் உற்சாகம் அடைந்துள்ளனர். #Congress #RahulGandhi #Vijayashanti
Tags:    

Similar News