செய்திகள்
சதமடிக்கப் போகும் பெட்ரோல் விலை - பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் பாராட்டு
பெட்ரோல் விலை நூறு ரூபாயை நெருங்கப் போகும் நிலையில் இந்த சாதனைக்காக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி பாராட்டு தெரிவித்துள்ளார். #Petrolheadingcentuy #CongresscongratulatesModi
புதுடெல்லி:
நாளொரு உயர்வும், பொழுதொரு ஏற்றமுமாக அதிகரித்து கொண்டே வரும் பெட்ரோல், டீசல் விலைகளால் மக்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அக்கட்சியின் அபிஷேக் மனு சிங்வி, பெட்ரோல் விலை நூறு ரூபாயை நெருங்க வைத்த சாதனைக்காக பிரதமர் மோடியை பாராட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய முற்போக்கு ஆட்சி காலத்தில் பெட்ரோலிய கச்சா எண்ணையின் விலை பீப்பாய்க்கு 130 டாலர்கள் அளவுக்கு உயர்ந்து, 110 முதல் 115 டாலர்களாக நீண்டகாலம் நிலைத்து நின்றது. ஆனால், அப்போது எல்லாம்கூட பெட்ரோல், டீசல் விலைகள் இந்த அளவுக்கு உயர்த்தப்படவில்லை.
தற்போது, கச்சா எண்ணையின் விலை பீப்பாய்க்கு 68 டாலர்களாக சரிந்துள்ள நிலையில், இன்றைய நிலவரப்படி மும்பையில் பெட்ரோலின் விலை 91-92 ரூபாயாக உள்ளது. நாம் வேகமாக வளர்ந்து பெட்ரோல் விலை நூறு ரூபாயை எட்டும் அளவுக்கு உயர்வடைந்துள்ளோம். விரைவில் டீசல் விலையும் நூறு ரூபாயை தொட்டுவிடும். இதற்காக பிரதமர் மோடியை நாம் பாராட்டுகிறேன் என அபிஷேக் மனு சிங்வி தெரிவித்துள்ளார். #Petrolheadingcentuy #CongresscongratulatesModi