செய்திகள்

காஷ்மீரில் துப்பாக்கி சண்டை- 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Published On 2018-09-15 08:39 GMT   |   Update On 2018-09-15 08:39 GMT
ஜம்மு காஷ்மீரின் குல்காம் பகுதியில் நடைபெற்ற சண்டையில் 5 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். #JKEncounter #Kulgam
ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநிலத்தின் எல்லையோர பகுதிகளில் ஊடுருவியுள்ள தீவிரவாதிகளை ஒடுக்கும் விதமாக ராணுவ நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதனால் அங்கு கடந்த சில மாதங்களில் இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டு இருந்தனர்.

இந்த நிலையில் காஷ்மீர் மாநிலம் குல்காம் அருகே உள்ள சவுகம் எனும் இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவு துறை பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் அளித்தது.

இதை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அந்த இடத்துக்கு விரைந்தனர். தீவிரவாதிகளை தேடும் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பதுங்கி இருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இரவு முதல் இன்று காலை வரை விடிய விடிய இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது.

பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் ஹிஸ்புல் முஜாகின் மற்றும் லஷ்கர்-இ- தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள்.

ஆயுதங்கள் திருட்டு, 2 வங்கி கொள்ளை, ஊழியர் மற்றும் போலீசாரை சுட்டுக் கொன்றது உள்பட பல்வேறு சம்பவங்களில் இந்த தீவிரவாதிகள் தொடர்புடையவர்கள்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பாரமுல்லா- காசிகுன்ட் இடையே ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. #JKEncounter #Kulgam
Tags:    

Similar News