செய்திகள்

மனோகர் பாரிக்கருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு - முதல்வர் பொறுப்பு கைமாறுகிறது

Published On 2018-09-15 04:24 GMT   |   Update On 2018-09-15 04:24 GMT
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ள நிலையில், அவரது பொறுப்பை மூத்த அமைச்சர் ஒருவரிடம் தற்காலிகமாக ஒப்படைக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. #ManoharParrikar
பனாஜி:

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் கடந்த மார்ச் மாதம் கணைய நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக அமெரிக்கா சென்றார். அங்கு ஏறக்குறைய இரு மாதங்கள் சிகிச்சை பெற்ற மனோகர் பாரிக்கர்  ஜூன் மாதம் நாடு திரும்பினார். அதன்பிறகு மருத்துவப் பரிசோதனைக்காக, மீண்டும் கடந்த செப்டம்பர் அமெரிக்கா சென்றிருந்த பாரிக்கர் சிகிச்சை முடிந்து 6-ம் தேதி நாடு திரும்பினார்.

நேற்று மனோகர் பாரிக்கர் உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து வடக்கு கோவா மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மருத்துவமனையில் இருந்தபடியே அமைச்சர்கள் மற்றும் கோவா மாநில பாஜக மூத்த தலைவர்களை சந்தித்து பேசினார். மேல்சிகிச்சைக்காக மனோகர் பாரிக்கர் இன்று டெல்லி வர உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே பாரிக்கர் உடல்நலம் கருதியும் தற்போதைய நிலையில் அவரால் நிர்வாக பொறுப்புகளை கவனிக்க முடியாத நிலையில் உள்ளார் என்பதால் பாரிக்கருக்கு பதிலாக புதிய முதல்வரை தேர்வு செய்ய பா.ஜ.க மேலிடம் முடிவுசெய்துள்ளதாகவும், இதற்காக வரும் திங்கள் கிழமை மத்தியக்குழு கோவா செல்ல உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.



பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோர் தொடர்ந்து பாரிக்கருடன் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். அமைச்சரவையில் உள்ள மூத்த அமைச்சர் ஒருவரிடம் முதல்வர் பொறுப்பை தற்காலிகமாக ஒப்படைக்க பாரிக்கர் விரும்புவதாகவும் தெரிகிறது. இதுபற்றி பாஜக மேலிடம் ஆலோசனை நடத்தி வருகிறது. #ManoharParrikar
Tags:    

Similar News