செய்திகள்

ஓரினச்சேர்க்கை என்பது குற்றமல்ல: 377-வது சட்டப்பிரிவை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

Published On 2018-09-06 06:33 GMT   |   Update On 2018-09-06 06:33 GMT
ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது குற்றம் என வரையறுக்கப்பட்டுள்ள சட்டப்பிரிவு 377-ஐ ரத்து செய்து உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. #Section377 #SupremeCourt
புதுடெல்லி:

இந்திய தண்டனைச் சட்டம் 377ன்படி, இயற்கைக்கு மாறாக ஆண்களோ, பெண்களோ ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றமாக கருதப்படுகிறது. இந்த சட்டத்தை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் ‘நாஸ்’ என்ற  தன்னார்வ தொண்டு நிறுவனம்  வழக்கு தொடர்ந்தது.

இதில், கடந்த 2009ம் ஆண்டு தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், ‘பரஸ்பர சம்மதத்துடன் ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றமாகாது’ என பரபரப்பு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள், கடந்த 2013ம் ஆண்டு அளித்த தீர்ப்பில், டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்தனர்.



இதனை எதிர்த்து மீண்டும் மேல்முறையீடு செய்யப்பட்டது. பிரபல பாலிவுட் நடன இயக்குனர் என்.எஸ்.ஜோஹர், பத்திரிகையாளர் சுனில் மெஹ்ரா போன்ற பல்துறை பிரபலங்கள் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கும் சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இதுதொடர்பாக அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள சில முக்கிய அம்சங்களையும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளதால் வழக்குகள் அனைத்தும் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டன.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான இந்த அமர்வு, இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசிடம் விளக்கம் கேட்டிருந்தது. விசாரணையின்போது, நீதிமன்றத்திடமே முடிவை விட்டுவிடுவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இரு தரப்பினரின் வாதப்பிரதிவாதங்கள் கடந்த ஜூலை 17-ம் தேதி நிறைவடைந்ததையடுத்து, தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. காலை 11.30 மணியளவில் தீர்ப்பை வாசித்த நீதிபதிகள், ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இருக்கும் என்றும், இயற்கைக்கு முரணான பாலியல் உறவு தண்டனைக்குரிய குற்றமல்ல என்றும் கருத்து தெரிவித்தனர். அத்துடன், ஓரினச்சேர்க்கையை குற்றச் செயலாக கருதும் சட்டப்பிரிவு 377-ஐ ரத்து செய்து உத்தரவிட்டனர்.

ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இருக்கும் என்றும் அவரவர் உணர்வு மறுக்கப்படுவது இறப்புக்கு சமமானது எனவும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்தார். அரசிய சாசன சமநிலை என்பது எண்ணிக்கையை கொண்டு நிர்ணயிக்கப்படுவதில்லை என்றும் அவர் தெரிவித்தார். #Section377 #SupremeCourt
Tags:    

Similar News